அபுஜா: மும்பையைச் சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்று 22 இந்தியர்களுடன் மேற்கு ஆப்பிரிக்க கடலில் உள்ள கினியா வளைகுடாவில் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
மும்பையைச் சேர்ந்த ஆங்கிலோ ஷிப்பிங் கம்பெனிக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்று 22 இந்தியர்களுடன் மேற்கு ஆப்பிரிக்கா கடல்பகுதியில் உள்ள பெனின் நாட்டுக்கு அருகே கினியா வளைகுடாவில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது அக்கப்பலுடனான தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நைஜீரியா அரசு அதிகாரிகளுடனும், பெனின் நாட்டு அதிகாரிகளுடனும் மத்திய அரசு தொடர்ந்து பேசி விபரங்களை சேகரித்துவருகிறது. கப்பல் சென்ற பாதை குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. மாயமான கப்பல் குறித்து அறிய விரும்புவார்கள் +2349070343860 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.