

அமெரிக்காவின் மிக முக்கியமான அரசுப் பொறுப்புகளில் ஒன்றான தகவல் தொடர்புத் துறை இயக்குநர் பதவியை வகித்து வந்த ஹோப் ஹிக்ஸ் (29), ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட அவர் பதவி விலகியிருப்பது, ஏற்கெனவே அதிபர் தேர்தலில் ரஷியத் தலையீடு குறித்து நடைபெற்று வரும் விசாரணையால் ஆட்சியில் சிக்கலைச் சந்தித்து வரும் டிரம்ப்புக்கு மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
முன்னாள் புகைப்பட மாடலான ஹோப் ஹிக்ஸ், அதிபர் தேர்தலின்போது குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப்பின் பிரசாரக் குழுவில் மக்கள் தொடர்புப் பிரிவை கவனித்துக் கொண்டார்.
அரசியல் அனுபவம் இல்லாத அவர், டிரம்ப்பின் முகபாவம், பேசும் தன்மைகளை மக்களிடம் திறம்பட கொண்டுச் சென்றவர் என்று கூறப்படுகிறது.
தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்றதும், 'அதிபரின் தகவல் தொடர்புப் பிரிவு இயக்குநர்' என்ற புதிய பதவியை உருவாக்கி அந்தப் பதவியில் ஹோப் ஹிக்ஸை டொனால்ட் டிரம்ப் நியமித்தார்.
இதற்கிடையே, அதிபர் தேர்தலின்போது டிரம்ப்புக்கு ஆதரவாகவும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் பொதுமக்கள் கருத்தைத் திரட்டும் வகையில் ரஷியா இணையதளத்தைப் பயன்படுத்தி தலையீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதிபர் டிரம்ப்புக்கும், அவரது அதிகாரத்தின் கீழ் இயங்கும் புலனாய்வு அமைப்புகளுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
இந்தச் சூழலில், ரஷியாவுக்கும், டிரம்ப்புக்கான அதிபர் தேர்தல் பிரசாரக் குழுவுக்கும் உள்ள ரகசியத் தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற புலனாய்வுக் குழுவிடம் செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் அளித்த ஹோப் ஹிக்ஸ், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக புதன்கிழமை அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.