பாகிஸ்தானில் சீக்கியப் பெண் ஒருவர் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாக்கப்பட்ட புகார் தொடர்பாக, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பெண் பாதுகாப்பாக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாக்கப்படுவதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் நான்கனா சாஹிப் என்ற பகுதியைச் சேர்ந்த சீக்கியப் பெண் ஒருவர் கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான விடியோக்களும் பரவி வந்தன.
இந்தியாவில் உள்ள சீக்கிய மதத்தவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட சீக்கியப் பெண் அங்குள்ள முஸ்லீம் இளைஞர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்து, சீக்கியர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது என்றும் கத்தி முனையில் அவர்கள் மதமாற்றத்திற்கு ஆளாக்கப்படுகிறன்றனர் என்றும் காட்டாய மதமாற்றம் குறித்து தில்லி சீக்கிய குருத்வாரா கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பாகிஸ்தான் சீக்கியப் பெண்ணை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த பிரச்னையை கையில் எடுத்து தீர்வு காண முற்பட வேண்டும்' என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் நான்கனா சாஹிப் பகுதி போலீசார் இது தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அந்தப் பெண் பாதுகாப்பாக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.