அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ், லாகூரின் கோட் லக்பத் சிறையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருதய நோய் பாதிப்பின் தாக்கம் அதிகமானதால், சிறை வளாகத்திலேயே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
நவாஸின் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், கடந்த வாரம் சிறைக்குள் சென்று, நவாஸைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர். பின்னர், நவாஸுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக, கூடுதல் தலைமைச் செயலருக்கு மரியம் நவாஸ் கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் கோரி, நவாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸுக்கு 6 வாரங்கள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நாட்டுக்குள் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும், அவரின் விருப்பப்படி சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மே 7-ஆம் தேதியுடன் அவரது ஜாமீன் காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜாமீன் காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி நவாஸ் தரப்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை 3 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு வெள்ளிக்கிழமை விசரித்தது.
அப்போது, நவாஸின் உடல் நலனுக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லை. மேலும் அவருக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும்போது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க சிறைக் காவலருக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. எனவே ஜாமீன் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று அந்த மனுவை ரத்து செய்தனர்.