அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு எதிரான போராட்ட வன்முறையில் வாஷிங்டனில் உள்ள காந்தி சிலையை சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் காவல்துறையின் பிடியில் இருந்த கருப்பினத்தவரான ஜாா்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்டது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி கேட்டு, அமெரிக்க கருப்பின மக்கள் தொடர்ந்து 8-ஆவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையிலும், ஊரடங்கை பொருட்படுத்தாது 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் இது வன்முறையாகவும் வெடித்துள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் வாஷிங்டன் மாகாணத்தில் இந்திய தூதரகத்தின் வெளியே உள்ள மகாத்மா காந்தி சிலையை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். சிலை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து, வெள்ளைத் துணியால் சிலை மூடப்பட்டுள்ளது. காந்தி சிலை அவமதிக்கப்பட்டது காந்தியவாதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காந்தி சிலை அவமதிக்கப்பட்டது குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார்.
'இந்திய தூதரகத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்திய அரசு கருணையுடன் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.