மூன்று மாதங்களுக்குப் பிறகு ஈபிள் கோபுரம் வருகிற ஜூன் 25 அன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற கட்டங்களுள் ஒன்றான ஈபிள் கோபுரம், கரோனா அச்சுறுத்தலினால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் 13 அன்று மூடப்பட்டது.
தற்போது பிரான்சில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நினைவுச் சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள் பல திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் ஜூன் 25 அன்று மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட உள்ளது. அதேநேரத்தில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
11 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கோபுரத்தின் முதல் தளம் வரை மட்டுமே செல்ல முடியும். அதுவும் படிக்கட்டுகள் வழியாக மட்டுமே செல்ல வேண்டும். மேலே ஏறும் பார்வையாளர்கள் மற்றும் கீழிறங்கும் பார்வையாளர்கள் தொடர்புகொள்ளாத அளவுக்கு, கிழக்கு தூணிலிருந்து ஏறவும், மேற்குத் தூண் வழியாக பார்வையாளர்கள் இறங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.