சீனாவில் கரோனா கண்காணிப்பு முகாமாக இயங்கிய ஹோட்டல் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய புதிய வகை கரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, ரஷியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 94 நாடுகளுக்குப் பரவியுள்ளது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1 லட்சத்தைத் தாண்டியது. சனிக்கிழமை நிலவரப்படி, அந்த வைரஸ் 1.02 லட்சம் பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸுக்கு சீனாவில் நேற்று மட்டும் 27 பலியாகி உள்ளனர்.
இதனிடையே சீனாவின் பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் உள்ள 6 மாடி ஹோட்டல் ஒன்று கரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பு இருக்கலாம் என கருதப்படும் ஏராளமானோர் இந்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் அந்த ஹோட்டல் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தவர்கள் 70-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த சுமார் 147 பேர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 47 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மீட்புக்குழுவினர் முகக்கவசம் அணிந்தபடி மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.