ஜெனீவா: சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு உலகளவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அவசரகால அமைப்புத் தலைவர் மைக் ரயன் கூறுகையில், உலகளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லாமல் கரோனா பாதித்து பலியாவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
சீனாவில் முதல் முறையாக கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு ஒன்பது மாதங்களில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில், மைக் ரயன் பேசுகையில், பொது முடக்கத்தை தளர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளீர்களா என்று சுய பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஐரோக்கிய நாடுகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கரோனா பரிசோதனை, கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிவது மற்றும் கைகளை சுத்தப்படுத்துவது போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.