அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அதிபர் டிரம்ப் சுட்டுரையில் உறுதி செய்துள்ளார். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே அதிபரின் உதவியாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிபர் டிரம்புக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.