மீண்டும் தலைதூக்கும் கரோனா: மொரீசியஸில் பொதுமுடக்கம் அமல்
அதிகரித்துவரும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மொரீசியஸ் நாட்டில் மீண்டும் 2 வார காலத்திற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
உலகம் முழுவதும் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும் சில நாடுகளில் மீண்டும் அதன் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. மொரீசியஸ் நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் தலை தூக்கத் தொடங்கி உள்ளது.
மார்ச் 5 முதல் தற்போதுவரை புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 2 வார காலத்திற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் பிரவீந்த்குமார் ஜுக்னாத் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
துறைமுகம், விமான நிலையம், மருத்துவமனை சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் புதன்கிழமை முதல் செயல்படும். மேலும் பல்பொருள் அங்காடிகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் அகரவரிசை சுழற்சி அடிப்படையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.