இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலி புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 61.
தான்சானியா அதிபராக செயல்பட்டு வந்தவர் ஜான் மகுஃபுலி கடந்த சில வருடங்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2 வார காலமாக பொது நிகழ்ச்சியில் மகுஃபுலி கலந்து கொள்ளாத நிலையில் அவரது உடல்நலம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.
மகுஃபுலி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் இதய நோய் காரணமாக புதன்கிழமை உயிரிழந்ததாக துணை அதிபர் சமியா சுலுஹூ அறிவித்தார்.
இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மகுஃபுலி காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து தான்சானியா நாட்டில் 14 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும், நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.