நேபாளத்தின் முகு மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் இதுவரை 32 பேர் பலியானதாகவும் 6 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று(அக்-12) நேபாள நாட்டில் முகு மாவட்டத்தின் நேபாள்கஞ்ச் பகுதியிலிருந்து கம்கதி நகரை நோக்கி பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சயநாத்ராரா பகுதியைக் கடக்கும்போது பினா ஜ்யாரி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது.
சற்றும் எதிர்பாராத இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 39 பேரில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் விபத்தில் படுகாயமுற்ற 16 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காததால் மேலும் 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.