ஆப்கானிஸ்தானின் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். மேலும் அங்கு ஆட்சியமைப்பதற்கான பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களுடைய நாட்டினரை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டின் சூழ்நிலை குறித்து உலக நாடுகள் கண்காணித்து வருகின்றன.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் வருகிற ஆகஸ்ட் 24 அன்று ஆப்கானிஸ்தானில் ஒரு சிறப்பு அமர்வை நடத்தவுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் மனித உரிமை மீறல்கள் நடக்கலாம் என்ற அச்சத்தில் இந்த சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் வேண்டுகோளின் பேரில் நடத்தப்படும் இந்த சிறப்பு அமர்வில் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து "தீவிர மனித உரிமை கவலைகள்" என்ற தலைப்பில் உரையாற்றப்படுகிறது. இந்தக் கோரிக்கையை இதுவரை 89 நாடுகள் ஆதரித்துள்ளன. பெரும்பாலான பிரதிநிதிகள் காணொலி வாயிலாக உரையாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.