புவி வெப்பமயமாதலால் அழிந்த 14% பவளப்பாறைகள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
அதிகரித்துவரும் புவி வெப்பமயமாதல் காரணமாக உலகில் 14 சதவிகித பவளப்பாறைகள் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
காலநிலை மாற்றம் காரணமாக உலகம் தற்போது பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்துவருகிறது. குறிப்பாக புவி வெப்பமயமாதலால் கடல் பரப்பில் வாழும் பவளப்பாறைகள் அழிந்து வருவது அதிகரித்துவருகிறது.
கடலின் மொத்தப் பரப்பில் 0.2 சதவிகிதம் மட்டுமே பவளப்பாறைகள் இருந்தாலும் கடலின் பல்லுயிர் பெருக்கத்தில் அவை முக்கியப்பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில் உலகளாவிய பவளப்பாறைகள் கண்காணிப்பு கூட்டமைப்பு மேற்கொண்ட ஆய்வில் அரியவகை பவளப்பாறைகள் புவி வெப்பமயமாதல் காரணமாக அழிந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதுவரை உலகின் 14 சதவிகித பவளப்பாறைகள் அழிந்துவிட்டதாகத் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. உலகம் முழுவதும் 73 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 11700 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் பவளப்பாறைகள் அழிந்துள்ளது தெரியவந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மட்டும் இத்தகைய அழிவு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள இந்த ஆய்வு புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தத் தவறினால் உலகில் பவளப்பாறைகளே இல்லாத நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது.