உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை பஞ்சாப் முதல்வர் சன்னி செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சந்திக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்தில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பாஜகவினர் வாகனங்களை ஏற்றியதாகக் கூறி இருதரப்பினரிடையேயான மோதலில் 9 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் நாடுமுழுவதும் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இதற்காக தில்லி சென்றுள்ள அவர் மாலை மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார்.
இதையும் படிக்க | கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகள்: பதைபதைக்கும் விடியோ
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும். இதுபோன்ற (லக்கிம்பூர் கெரி) சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இன்றைய கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இந்த பிரச்னையை குறித்து விவாதிப்பேன் எனத் தெரிவித்தார்.