கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகள்: பதைபதைக்கும் விடியோ

உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட பதைபதைக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகள்
கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகள்

உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட பதைபதைக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா, மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவ்வழியாக வந்த பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றதாகவும், இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகவும் பின்னர் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பாஜகவினர் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பாஜக தலைவர்களின் அணிவகுப்பு வாகனத்திற்கு முன்பாக வந்த கறுப்பு நிற கார் ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மீது வேகமாக ஏறியதுடன், நிற்காமல் தொடர்ந்து வாகனங்கள் செல்லும் காணொலியை இன்று காலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார். அந்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது.

அந்த காணொலியில் உள்ள காரில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவும் இருந்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், ஆஷிஷ் மிஸ்ரா மறுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com