காபூல்: ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேயின் சகோதரரை தலிபான்கள் கொன்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அதிபர் முகமது அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பிச் சென்றார்
துணை அதிபர் அம்ருல்லா சலேயும் காபூலைவிட்டு வெளியேறி தலிபான்கள் எதிர்ப்புப் படையினர் வசம் இருந்த பஞ்சஷேர் மாகாணத்துக்குச் சென்றார். பின்னர், அவர் அங்கிருந்து வெளியேறி துருக்கியில் தஞ்சமடைந்ததாக கூறப்பட்டது.
பஞ்சஷேர் மாகாணத்தையும் தலிபான்கள் கடும் சண்டைக்குப் பின்னர் கைப்பற்றினர். இந்நிலையில், அங்கு இருந்த அம்ருல்லா சலேயின் சகோதரர் ரொகுல்லா அசிஸியை கடந்த வியாழக்கிழமை தலிபான்கள் கொன்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை அவரது மருமகன் எபதுல்லா சலே "ராய்ட்டர்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.