கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கும் ராணுவ வீரர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என அமெரிக்க ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்கும் விதமாக பல்வேறு தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | பாரம்பரியம் என்கிற பெயரில் கொன்று குவிக்கப்பட்ட 1500 டால்பின்கள்
இந்நிலையில் அமெரிக்காவில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் பணியில் உள்ள அனைத்து ராணுவ வீரர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பயோஎன்டெக் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதிலிருந்து ராணுவ வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்த வடகொரியா
மருத்துவ, மத அல்லது நிர்வாக அடிப்படையில் ராணுவ வீரர்கள் கரோனா தடுப்பூசி செலுத்துவதிலிருந்து விலக்கு கோரலாம் எனும் நடைமுறை பின்பற்றப்பட்டாலும் குறிப்பிட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்தால் இடைநீக்கம் அல்லது பணிநீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.