100 கோடி பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை
சீனாவில் இதுவரை 100 கோடி பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பரவலுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டப்பட்டுவருகிறது.
நாட்டின் மொத்த மக்கள்தொகையில் இதுவரை 70 சதவிகிதத்தினருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய மருத்துவ கவுன்சிலின் செய்தித்தொடர்பாளர் மீ ஃபெங் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வரும் தடுப்பூசி செலுத்தும் பணியில் இது ஒரு புதிய மைல்கல் என அவர் குறிப்பிட்டார்.
உலகின் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் அதிக தடுப்பூசிகளை செலுத்திய நாடு எனும் பெருமையை சீனா பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளில் மூன்றில் ஒரு பகுதியை சீனா செலுத்தியுள்ளது.