உக்ரைனின் புச்சாவில் நடந்த மக்கள் படுகொலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வரும் ரஷியப் படையினர் உக்ரைன் மக்களையும் தாக்குவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டி வருகிறார்.
தலைநகர் கீவ் அருகே புச்சா பகுதியில் 400க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்குழியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதும் சிலரது உடல்களில் கைகள் கட்டப்பட்டும் சிலரை நெருங்கிய தூரத்தில் துப்பாக்கியால் சுட்டும் என சித்ரவதை செய்யப்பட்டதாகவும் கூறும் உக்ரைனின் குற்றச்சாட்டு உலக நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷியப் படையினர் செய்தது இனப்படுகொலை என்று அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புச்சா படுகொலை தொடர்பாக ரஷியாவை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என அமெரிக்கா கூறியது. மேலும் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியது.
இதைத் தொடர்ந்து ரஷியாவை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து நீக்க பிரிட்டனும் ஆதரவு தெரிவித்துள்ளது.
'புச்சாவில் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட உடல்கள் மற்றும் கொடூரமான கொலைகள் உள்ளிட்ட போர்க்குற்றங்களுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதால் ரஷியா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக இருக்க முடியாது. கவுன்சிலில் இருந்து ரஷியாவை இடைநீக்கம் செய்ய வேண்டும்' என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவும், ரஷியாவை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.