கொழும்பு: இலங்கையில் உள்ள மருத்துவமனைகள், வரும் வாரங்களில் அவசரகால சிகிச்சை அளிக்கக் கூட போதுமான மருந்து மற்றும் மருத்துவப் பொருள்கள் இல்லாமல் அவதிப்படக்கூடும் என்று தேசிய மருத்துவக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒருவேளை, மருந்து மற்றும் மருத்துவப் பொருள்களின் விநியோகம் சீரடையாவிட்டால், பெருங்கேடு ஏற்பட்டு, அதிகளவில் உயிரிழப்புகள் நேரிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடும், அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடும் நிலவுகிறது.
இந்த நிலையில், இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு, இலங்கை மருத்துவக் கழகம் எழுதியிருக்கும் கடிதத்தில், மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாததால் ஏற்கனவே வழக்கமாக நடைபெறும் அறுவைசிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், உடனடியாக மருந்து மற்றும் மருத்துவ பொருள்களின் விநியோகம் சீரடையாவிட்டால், இன்னும் ஒரு சில வாரங்களில் அவசரகால சிகிச்சைகள் கூட அளிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் பெரும் அபாயம் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.