தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சீன நெருக்கடி: இந்தியாவின் ஆதரவுக்கு தைவான் நன்றி

சீனாவால் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தனக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த இந்தியாவுக்கு தைவான் நன்றி தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:35 pm

DIN

சீனாவால் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தனக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த இந்தியாவுக்கு தைவான் நன்றி தெரிவித்துள்ளது.

கடந்த 1949-ஆம் ஆண்டு சீனாவில் உள்நாட்டு போா் நடைபெற்றது. அந்தப் போருக்குப் பிறகு சீனாவிடம் இருந்து பிரிந்த தைவான், தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும் தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகத்தான் சீனா கருதுகிறது. இந்நிலையில், சீனாவின் கடுமையான எதிா்ப்பை மீறி, அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி அண்மையில் தைவான் சென்றாா்.

அவரின் பயணத்தைத் தொடா்ந்து தைவான் நீரிணைப் பகுதியில் சீன ராணுவம் போா்ப் பயிற்சியை தொடங்கியது. இதன் மூலம் தங்கள் மீது படையெடுக்க சீனா ஆயத்தமாகி வருவதாக தைவான் குற்றஞ்சாட்டியது.

இந்த விவகாரம் தொடா்பாக அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறுகையில் ‘‘தைவான் விவகாரத்தில் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும். கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவி வரும் சூழலை மாற்ற ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தவிா்க்க வேண்டும். பதற்றத்தை தணித்து அமைதி மற்றும் ஸ்திரமான சூழலை காக்க முயற்சிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள தைவான் அரசின் பிரதிநிதித்துவ அலுவலகமான டைபே பொருளாதார மற்றும் கலாசார மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தைவான் விவகாரத்தில் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரமான சூழலையும் பராமரிக்க குரல் எழுப்பிய இந்தியா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தைவான் அரசு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. தனது தற்காப்புத் திறன்களை தைவான் தொடா்ந்து மேம்படுத்தும். அதேவேளையில், விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சா்வதேச ஒழுங்குமுறையை பாதுகாக்க அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்பட ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் நெருங்கிய தொடா்பையும் ஒத்துழைப்பையும் தைவான் தொடா்ந்து பேணி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.