இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சீன உளவுக் கப்பல் திங்கள்கிழமை தாயகம் புறப்பட்டது.
சீன உளவுக் கப்பலான ‘யுவான் வாங்-5’, செயற்கைக்கோள், ராக்கெட், கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஆகியவை விண்ணில் செலுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அதிநவீன திறன் கொண்டது. இந்தக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்றது.
இந்தக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று இலங்கையிடம் மத்திய அரசு கவலை தெரிவித்தது. இதனால் அந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டது. எனினும் தங்கள் கடற்பகுதியில் எந்த அறிவியல் ஆராய்ச்சியிலும் ஈடுபடக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் அந்தக் கப்பல் அம்பாந்தோட்டைக்கு வருவதற்கு, பின்னா் இலங்கை அனுமதி அளித்தது.
துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட கப்பலில் தேவையான பொருள்கள் நிரப்பப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்தக் கப்பல் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு அம்பாந்தோட்டையிலிருந்து புறப்பட்டது. சீனாவின் ஜியாங் யின் துறைமுகத்துக்கு அந்தக் கப்பல் செல்வதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனா்.