இலங்கையில் எரிபொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மிதிவண்டிகளை வாங்க கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தொடரும் பொருளாதார சிக்கல் காரணமாக கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் மக்கள் தங்களது அத்தியாவசிய சேவையை பெறுவதற்கு கூட மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 550-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இருப்பினும், தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு காண்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதற்கு மாற்றாக, மிதிவண்டிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இலங்கையில் உள்ள மிதிவண்டிக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதுகுறித்து கொழும்புவில் மிதிவண்டி வாங்க வந்த ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,
“எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மிதிவண்டிக்கான தேவை அதிகரித்துள்ளது. விலை உயர்வு காரணமாக பெட்ரோல் வாங்க முடியவில்லை. நீண்ட வரிசையில் நின்றாலும் பெட்ரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பலர், மிதிவண்டிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.”