சூடானின் ப்ளூ நைல் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பழங்குடியினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் 16 கடைகள் சூறையாடப்பட்டதில் 31 பேர் கொல்லப்பட்டனர், 39 பேர் காயமடைந்தனர் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் பழங்குடியினருக்கு இடையே 2003 ஆம் ஆண்டு முதல் மோதல் நடந்து வருகிறது.
இதுதொடர்பாக மாநில பாதுகாப்புக் குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அல்-டமாசின் மற்றும் அல்-ருஸ்ஸைர்ஸ் பகுதிகளில் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, பெர்டி மற்றும் ஹவுசா பழங்குடியினருக்கு இடையே வெள்ளிக்கிழமை வன்முறை மோதல்கள் வெடித்ததாக உள்ளூர்வாசிகள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | மேற்கு கரையில் அப்பாஸுடன் அமெரிக்க அதிபா் பைடன் சந்திப்பு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வழக்கமான பாதுகாப்புப் படையினர் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சந்தேகத்துக்குரிய சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதுடன் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
பழங்குடியினருக்கு இடையே நடைபெற்ற இந்த மோதலில் 16 கடைகள் சூறையாடப்பட்டதாகவும், 31 பேர் இறந்ததாகவும், 39 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடான் ஆயுதப் படைகளின் தளபதியான அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான், 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி அவசரகால நிலையை அறிவித்து, அரசாங்கத்தை கலைத்ததிலிருந்து சூடான் அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.