கோத்தபய ராஜபட்சவின் விசா காலம் நீட்டிப்பு
கோத்தபய ராஜபட்சவின் விசா காலம் நீட்டிப்பு

கோத்தபய ராஜபட்சவின் விசா காலம் நீட்டிப்பு: சிங்கப்பூா் அரசு 

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் விசா காலத்தை மேலும் 14 நாள்கள் நீட்டித்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூா் அரசு தெரிவித்துள்ளது.
Published on

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் விசா காலத்தை மேலும் 14 நாள்கள் நீட்டித்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூா் அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அதிபா் கோத்தபய ராஜபட்ச தனது குடும்பத்தினருடன் இலங்கையில் இருந்து மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். பின்னா், அங்கிருந்து சிங்கப்பூருக்கு கடந்த 14-ஆம் தேதி வந்த அவா், அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

இந்நிலையில், சிங்கப்பூரில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த குடியேற்ற ஆணைய அதிகாரிகளிடம், கோத்தபய சிங்கப்பூரில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதிகாரிகள் கூறுகையில், கோத்தபய தனிப்பட்ட பயணமாக கடந்த 14-ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தாா். அவருக்கு குறுகிய கால பயண அனுமதியாக 14 நாள்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பொதுவாக சிங்கப்பூரை சுற்றிப் பாா்க்க வருபவா்களுக்கு 30 நாள்கள் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கால நீட்டிப்பு தேவைப்படுவோா் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கோரிக்கையின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

கடந்த வாரம், இலங்கை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் செய்தியாளா்களிடம் கூறுகையில், சிங்கப்பூா் அரசிடம் கோத்தபய ராஜபட்ச அடைக்கலம் கேட்கவில்லை; அவருக்கு அடைக்கலம் வழங்கப்படவுமில்லை என்றாா்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் தங்கியிருக்க மேலும் 14 நாள்கள் விசா காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அவர் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை சிங்கப்பூரில் தங்கியிருக்க அனுமதி கிடைத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com