உக்ரைனின் ஆயுதங்கள் தாங்கிய ராணுவ விமானத்தை கருங்கடலுக்கு அருகே சுட்டு வீழ்த்தி விட்டதாக ரஷியாவின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புத் துறை சார்பில் கூறியிருப்பதாவது, “ கருங்கடலுக்கு அருகே அமைந்துள்ள துறைமுக நகரமான ஒடிசாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் தாங்கிய உக்ரைனின் ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே போல ரஷிய ஏவுகணைகள் உக்ரைனின் சுமி பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீதும் வீசப்பட்டன.” எனக் கூறியுள்ளது.
இதற்கிடையில், உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடமிருந்து கிடைக்கப் பெறும் ஆயதங்களை வைத்து தனது படையை வலிமைப் படுத்தி வருகிறது. உக்ரைன் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு முன்பாக தன்னிடம் புதிதாக கிடைத்துள்ள ஆயுதங்களின் உதவியுடன் ரஷியாவை எதிர்த்துப் போரிடும் என உக்ரைனின் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நியமிக்கப்பட்டுள்ள டேவிட் அரக்காமியா தெரிவித்துள்ளார்.
லுகான்ஸ்க் பிராந்தியத்திலுள்ள சிவியெரோடொனட்ஸ்க் நகரத்தின் ஒரு பகுதியை ரஷியாவிடம் இருந்து மீண்டும் கைப்பற்றி விட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.