கீவ் நகரின் உளவுத்துறை கட்டடத்திற்கு அருகே உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என ரஷிய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
ரஷிய அதிபர் புதின் உத்தரவை தொடர்ந்து கடந்த 6 நாள்களாக உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக, அரசு கட்டடங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது இன்று ரஷிய படைகள் குண்டு மழை பொழிந்தன. இதில், இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவர் பலியானார். மேலும், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இந்நிலையில், கீவ் நகரில் உள்ள உளவுத்துறையின் கட்டடத்தின் அருகே வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு ரஷியா அறிவுறுத்தியுள்ளது.
இந்த எச்சரிக்கை வெளியான நிலையில், இன்னும் சற்று நேரத்தில் உளவுத்துறையின் கட்டடம் மீது ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் அச்சம் எழுந்துள்ளது.