புது தில்லி: போர் கடுமையாக நடைபெற்று வரும் உக்ரைனின் சுமி நகரில் சிக்கியிருந்த 694 இந்தியர்கள், பத்திரமாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
சுமி நகரில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் பணிகள் நேற்று இரவு தொடங்கியது, அங்கிருந்த மாணவர்கள் பேருந்துகள் மூலமாக போல்டாவா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து தகவல்கள் அறிய அமைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு மையத்தை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது, நேற்று நள்ளிரவு வரை, சுமி நகரில் சிக்கியிருந்த 694 இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
அவைரும் பேருந்துகள் மூலம் போல்டோவா அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடுமையான போர் நடந்து வரும் சுமியிலிருந்து இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு உக்ரைன் மற்றும் ரஷிய அதிபர்களை, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய போது வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 17,400 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர்.