ஐரோப்பிய நாடுகளில் 2020ஆம் ஆண்டில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் காற்று மாசுபாட்டினால் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் காற்று மாசுபாடு அச்சுறுத்தும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிக்க | மீண்டும் அதிகரிக்கும் கரோனா: கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கிய சீனா!
இந்நிலையில் ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான புள்ளி விவரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 2020ஆம் ஆண்டில் மட்டும் ஐரோப்பிய நாடுகளில் 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களுக்குள்ளாகி பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பேரிடர் காலத்தில் குறைந்த காற்று மாசுபாட்டை சுட்டிக்காட்டியுள்ள தரவுகள் அதற்கு பின்னான காலத்தில் அதன் அளவு வேகமாக அதிகரித்ததாகத் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் ஊரகப் பகுதிகளில் உள்ள 96 சதவிகித மக்கள் காற்று மாசுபாடு சிக்கலை எதிர்கொண்டு வருவதாகவும் எனினும் 2005 முதல் 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் இறப்பு 45 சதவிகிதம் குறைந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் 2030ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய காற்று மாசுபாடு நிலையை எட்ட முடியும் என ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.