உக்ரைனில் ரஷியா இனப்படுகொலை செய்துள்ளதாக அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள நகரங்களில் புதைக்குழியில் இவர்ந்து 400க்கும் மேற்பட்ட உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கீவ் புறநகர் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு முன்னதாக அவர்களை சித்ரவதை செய்து ரஷியப் படையினர் கொன்றுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அந்நாட்டின் அதிபர், வொலோதிமீர் ஸெலென்ஸ்கி நேற்று ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,
நாங்கள் உக்ரைன் குடிமக்கள். எங்கள் நாட்டில் 100க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். அந்த இன மக்கள் இன்று அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ரஷியாவின் கொள்கைக்கு அடிபணியவில்லை என்பதே இந்த இன அழிப்புக்குக் காரணம். கீவ் நகரைச் சுற்றி நடந்தவை ரஷியப் படையினரால் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை.
21 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இது நடந்து கொண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தல்.
நாங்கள் ரஷியாவுடன் எந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறேன் என்று சொல்வது கடினம். ஆனால், ஒரு அதிபராக நான் பேசியாக வேண்டும்.
இங்கு தாக்குதல் நடந்துகொண்டிருக்கும்போது நான் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே, முதலில் போரை நிறுத்த வேண்டும்; அதன்பின்னர் ரஷிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறேன்.
போரை நிறுத்தினால் எங்களுடைய ராணுவம் மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
மேற்கத்திய நாடுகளிடம் இருந்து போதுமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைத்தால் நாங்கள் நடுநிலையாக இருக்கத் தயார். ஆனால், எங்களுக்கு யாரும் உத்தரவாதம் கொடுக்கவில்லை.
உக்ரைன் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எந்த சட்டத்தின் மூலமாக என்ன தண்டனை சரியானது என்று தெரியவில்லை. ஆனால், இரண்டு பிள்ளைகளின் தந்தையாகவும், அதிபராகவும் இவர்களை சிறையில் அடைத்தால், அவர்கள் செய்த காரியங்களுக்கு இந்த தண்டனை மிகவும் சிறியது என்று நான் நினைக்கிறேன்' என்று பேசியுள்ளார்.
இதையும் படிக்க | ரஷிய படையினரால் பொதுமக்கள் படுகொலை