இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பிரதமர் மகிந்த ராஜபட்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கத்தோலிக்க தேவாலயங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், விவகாரத்தை கோத்தபய ராஜபட்ச தலைமையிலான அரசு கையாளும் விதத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, அமைச்சரவை பதவி விலகியது.
கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த 41 எம்.பி.க்கள் ராஜபட்ச அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்று சுயேச்சைகளாக செயல்படப் போவதாக அறிவித்தனா்.
இதனிடையே ராஜபட்ச அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய தேசிய கத்தோலிக்க மையத்தின் இயக்குநர் சிரில் காமி ஃபெர்னான்டோ, ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு கத்தோலிக்க மையம் ஆதரவு அளிக்கிறது. நடைபெற்று வரும் பொதுமக்கள் போராட்டத்தில் கத்தோலிக்க இயக்கத்தினர் பலர் ஏற்கெனவே பங்கேற்றுள்ளனர்.
மேலும், போராட்டத்திற்கு ஆதரவாக சமயம் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். ஈஸ்டர் பண்டிகை முதல் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடவுள்ளோம் என்று கூறினார்.