தைவானைச் சுற்றி சீனா குண்டுவீச்சு: அமெரிக்கா கண்டனம்

தைவான்தீவைச் சுற்றிலும் குண்டுகள் வீசி போா் பயிற்சி மேற்கொண்ட சீனாவின் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
தைவானைச் சுற்றி சீனா குண்டுவீச்சு: அமெரிக்கா கண்டனம்


வாஷிங்டன்: சீனாவின் எதிா்ப்பையும் மீறி, சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டதற்குப் பதிலடியாக, அந்த தீவைச் சுற்றிலும் குண்டுகள் வீசி போா் பயிற்சி மேற்கொண்ட சீனாவின் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, தைவானின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான நீண்டகால குறிக்கோளுக்கு முரணான நடவடிக்கை என்று கூறியுள்ளது. 

ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நான்சி பெலோசி, தைவானுக்குச் செல்வாா் என்று அண்மையில் தகவல் வெளியானது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

எனினும், சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மலேசியா சென்ற நான்சி பெலோசி, அங்கிருந்து அதிகாரபூா்வமாக அறிவிக்காமல் தைவான் சென்றடைந்தாா்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் உயா்நிலைத் தலைவா் ஒருவா் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் சீனா, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே எச்சரித்திருந்தது போல் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்தச் சூழலில், தைவான் நீா்ச்சந்தி பகுதியைச் சுற்றிலும் சீன ராணுவம் வியாழக்கிழமை மதியம் போா் பயிற்சியில் ஈடுபட்டது. அந்தப் பகுதியில் ஏற்கெனவே நிா்ணயக்கப்பட்டிருந்த ராக்கெட் குண்டுகள் வீசி இந்தப் போா்ப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில், இலக்குகள் மீது துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களின் திறன் இந்தப் பயிற்சியின்போது சோதித்துப் பாா்க்கப்பட்டது. அதில், அந்த ஆயுதங்களின் செயல்பாடு எதிா்பாா்த்ததைப் போல் திருப்திகரமாக இருந்ததாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், சீனாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஒரே இரவில், தைவான் நீா்ச்சந்தி பகுதியைச் சுற்றிலும் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது, இது தீவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் தகவல்தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

"தைவான் ஜலசந்தி மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான எங்கள் நீண்டகால குறிக்கோளுடன் பொறுப்பற்ற மற்றும் முரணான இந்த நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்," ஜான் கிர்பி கூறினார்.

தைவான் ஜலசந்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க, நான்சி பெலோசியின் வருகையை ஒரு சாக்குப்போக்காக சீனா மிகைப்படுத்தி பயன்படுத்துகிறது. 

மேலும், இது போன்ற நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததாகவும், பெய்ஜிங் என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. நெருக்கடியை நாங்கள் தேட மாட்டோம், விரும்பமும் மாட்டோம். அமெரிக்கா உறுதியானதாகவும், நிலையானதாகவும் பொறுப்புடனும் இருக்கும்.

எங்கள் நலன், தைவானின் நலன், பிராந்தியத்தின் நலன் மட்டுமே. மேலும் பதட்டங்களை அதிகரிக்க அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை என்றார். 

அதே நேரத்தில், அமெரிக்கா, தைவானை ஆதரித்து, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியைப் பாதுகாத்து வருவதால், சர்வதேச சட்டத்திற்கு இணங்க, மேற்கு பசிபிக் கடல்களிலும் வானங்களிலும் செயல்படுவதை அமெரிக்கா தடுக்காது என்று அவர் கூறினார். 

கடல் சுதந்திரம் மற்றும் சர்வதேச சட்டத்தை பாதுகாப்பதற்கான அதன் நீண்டகால அணுகுமுறையுடன் அமெரிக்கா அடுத்த சில வாரங்களில் தைவான் ஜலசந்தி வழியாக நிலையான விமான மற்றும் கடல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும். 

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனா மற்றும் தைவானைப் பிரிக்கும் மையக் கோட்டில் பறந்த விமானங்களின் எண்ணிக்கையை விட இரண்டு நாள்களில் பறந்த விமானங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்று ஜான் கிர்பி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com