
வொலோதிமீா் ஸெலென்ஸ்கி
போரைச் சமாளிக்க உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் நிதியுதவி செய்ய வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனில் ரஷியப்படையினர் 160 நாள்களைக் கடந்து போரிட்டு வருகின்றனர். அந்நாட்டில் முக்கியமான பல நகரங்களைக் கைப்பற்றியுள்ள ரஷியா தொடர் ஏவுகணைத் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, நேற்று முன்தினம் ஜபோரிஜ்ஜியா மற்றும் தெற்கு நகரமான நிகோபோல் பகுதியிலும் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், போர் துவங்கியதிலிருந்து இரு தரப்பிலும் பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 1 லட்சம் பேருக்கு மேல் இருக்கலாம் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: உக்ரைன் போரில் அதிகரிக்கும் பதற்றம்: ரஷிய விமான தளத்தில் குண்டுகள் வெடிப்பு
உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்கி வந்தாலும் அமெரிக்கா ஆயுதங்களுடன் நிதியுதவியும் வழங்கி வருகிறது.
தற்போது, அமெரிக்காவின் ஹிமாா்ஸ் ஏவுகணைத் தளவாடங்களை அந்த நாட்டுப் படையினா் பயன்படுத்தி வருகின்றனா். அதன் இலக்குகளை அமெரிக்க அதிகாரிகளே முடிவு செய்வதால் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில் அமெரிக்கா நேரடியாகப் பங்கேற்று வருகிறது.
இந்நிலையில், இன்று உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6 மாதத்தை நெருங்க உள்ளதால் மேற்கொண்டு ரஷிய ராணுவத்தை சமாளிக்க மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நிதியுதவி கோரியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...