ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான வியாழன் கிரகத்தின் தோற்றத்தை நாசா வெளியிட்டுள்ளது.
விண்வெளி ஆய்வுக்காக 10 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.79,000 கோடி) செலவில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப்(james webb space telescope) எனப்படும் உலகிலேயே மிகப்பெரிய, சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை நாசா கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் விண்வெளியில் செலுத்தியது. இந்த விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது.
குறிப்பாக, 1380 கோடி ஆண்டுகளுக்கு முன்னா் பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பு மூலம் இந்த பிரபஞ்சம் உருவானதாக நம்பப்படுகிறது. பிரபஞ்சத்தில் நமது பூமி இடம்பெற்றுள்ள பால்வெளி மண்டலம் உள்ளிட்ட கோடிக்கணக்கான மண்டலங்கள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மூலம் நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஏராளமான நட்சத்திர திரள்கள் காணப்படுகின்றன. புகைப்படத்தின் முன்பகுதியில் மாபெரும் நட்சத்திர திரள்களும், பின்பகுதியில் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திர திரள்களும் பிரகாசமாக ஒளிா்கின்றன. இந்தப் புகைப்படத்தின் ஒரு பகுதியானது, பெருவெடிப்பு நிகழ்ந்த ஆரம்ப காலத்தைக் காட்டுவதாகும் என நாசா தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: உலகை வியப்பில் ஆழ்த்திய தொலைநோக்கி: யார் இந்த ஜேம்ஸ் வெப்?
இந்த நிலையில், நேற்று நாசா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான வியாழன் கிரகத்தின் தோற்றப் படத்தை வெளியிட்டுள்ளது. சூரியக் குடும்பத்தின் 5-வது கோளாகக் கருதப்படும் வியாழன், சூரியனிலிருந்து சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. 12 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை முழுமையாகச் சுற்றி வருகிறது.
தற்போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான வியாழனின் படம் திரவம்போல் காட்சியளிக்கிறது.