ரஷியாவின் அணு ஆயுத படை நேற்று பயிற்சியில் ஈடுபட்டது. இதை, அந்நாட்டு அதிபர் புதின் மேற்பார்வையிட்டார். இதையடுத்து, உக்ரைன் அருகே குவிக்கப்பட்டுள்ள ரஷிய துருப்பு தாக்குவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க குற்றம்சாட்டியது.
போர் குறித்து மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து அச்சம் தெரிவித்துவரும் நிலையில், உக்ரைனை ரஷ்யா எந்த நேரத்திலும் தாக்கலாம் என அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு குழு பைடனிடம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இதுகுறித்து உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் பைடன் இன்று ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இப்பகுதியில் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை குறைத்து வருகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மேலும் நிலைமை குறித்து தீவிரமான கவலை ஏற்பட்டுள்ளது என ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனனர்.
எல்லை அருகே ராணுவத்தை குவித்துள்ளதாக ரஷிய, உக்ரைன் நாடுகள் பரஸ்பரம் குற்றம்சாட்டிவரும் நிலையில், உக்ரைனிலிருந்து வெளியேறும்படி தங்கள் நாட்டு மக்களை பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், "போரின் காரணமாக ரஷிய படைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. எல்லைக்கு அருகே அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர் மோதலின் விளிம்பில் இருந்து பின்வாங்குவார் என நம்புகிறோம்" என்றார்.