கரோனா பேரிடர் சூழலால் நடப்பாண்டு உலகம் முழுவதும் வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை 20.7 கோடியாக அதிகரிக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
கரோனா பேரிடர் தொடங்கியதிலிருந்து உலகம் முழுவதும் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளானது. பலரும் தங்களது வேலை வாய்ப்பை இழந்ததுடன், புதிய வேலைகள் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்துவரும் ஆண்டுகளில் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பின்மை கரோனா பேரிடர் சூழலுக்கு முந்தைய அளவைக் காட்டிலும் வேகமாக அதிகரிக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு மட்டும் 20.7 கோடி பேர் தங்களது வேலையை இழக்க உள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த 2019ஆம் ஆண்டு இருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் 2.1 கோடி அதிகமாகும்.
இதையும் படிக்க | உலகளவில் கரோனா பாதிப்பு 34.32 கோடியைத் தாண்டியது
கடந்த 2019ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 5.2 கோடி பேரின் முழு நேர வேலைக்கான நேரத்திற்கு நிகராக வேலை வாய்ப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே நிலை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தற்கால வேலைகள் நிரந்தரத் தீர்வைத் தராது எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.