உலக அதிசயங்களில் ஒன்றான மச்சு பிச்சு காட்டுத் தீயினால் பாதிக்கப்படும் அபாயகரமான சூழலில் உள்ளது.
மச்சு பிச்சு 500 ஆண்டுகள் பழமையான கற்களால் ஆன ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க இடம் ஆண்டிஸ் மலைத்தொடரின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த மச்சு பிச்சு நகரத்திற்கு அருகில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீயானது கடந்த செவ்வாய்க் கிழமை அன்று விவசாயிகள் சிலர் தேவையற்ற பொருட்களை கொளுத்தியபோது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த காட்டுத் தீயினால் 49 ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்நிலையில், இந்த காட்டுத் தீயானது 500 ஆண்டுகள் பழமையான மச்சு பிச்சு நகரை நோக்கி வேகமாகப் பரவி வருகிறது. தீயினை அணைக்கும் பணியில் பெரு நாட்டினைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ வேகமாகப் பரவுவதால் அதனைக் கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக உள்ளது.
இது குறித்து பேசிய தீயணைப்புப் படை அதிகாரி கூறியதாவது: “ நாங்கள் கடந்த 2 நாட்களாக இந்த காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இருப்பினும், தீயினை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. சில இடங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயினை அணைப்பது சவாலாக உள்ளது” என்றார்.