நல்ல நண்பர் ஷின்சோ அபேவுடன் இணைந்து இந்தியா-ஜப்பான் முன்னேற்றத்திற்கு உழைத்ததை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவு கூர்ந்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று (ஜூலை 8) மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஷின்சோ அபேவின் இழப்பு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கலை தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மன்மோகன் சிங் இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதர் சட்டோஷி சுசுகிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “ ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அவர் என்னுடைய நல்ல நண்பர். என்னுடைய ஆட்சிக் காலத்தின்போது நாங்கள் இருவரும் இந்தியா-ஜப்பான் வளர்ச்சிக்காக உழைத்துள்ளோம். எங்களது முயற்சியால் இரு நாடுகளும் நல்ல முன்னேற்றம் அடைந்தது. என்னுடைய ஆழ்ந்த இரங்கலை அபே குடும்பத்திற்கு தெரிவித்து விடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சுடப்பட்டார் ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே - செய்திப் படங்கள்
67 வயதான அபே ஜப்பான் நாட்டின் நீண்ட நாட்கள் பிரதமராக இருந்தவர். உடல் நலத்தினைக் கருத்தில் கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
துப்பாக்கியால் சுட்ட நபரை காவல் துறையினர் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஜப்பானில் நடந்த இந்த அசம்பாவிதம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.