
இலங்கையில் பிரதமர் இல்லத்தைத் தொடர்ந்து அலுவலகத்திலும் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். பிரதமர் அலுவலக கட்டடத்தின் மீது ஏறி தேசியக் கொடிகளைக் காட்டி பிரதமர் பதவி விலக வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
படிக்க | கோத்தபய மாலத்தீவில் இருக்கிறாரா? பதில் சொல்ல மறுக்கும் வெளியுறவுத் துறை
இருவரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் அவர்களது இல்லங்களை சிறைப்பிடித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பிரதமர் இல்லம் அமைந்துள்ள அலரி மாளிகையில் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள பொருள்களைப் பயன்படுத்தியும், சேதப்படுத்தியும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து தற்போது தலைநகர் கொழும்புவிலுள்ள பிரதமர் அலுவலகத்திலும் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். அவர்களை ராணுவத்தினர் தடுக்க முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க | இலங்கை அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்
எனினும் போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தில் புகுந்து முழுமையாக கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர் கோத்தபய ராஜபட்ச தனது ராஜிநாமா குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.