இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலையில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்களின் போராட்டத்தை அடுத்து, இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபட்ச பதவி விலகியதை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
மேலும், மஹிந்த ராஜபட்சவுக்கு பின்னர் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க அரசும் பொருளாதாரத்தை சரிசெய்ய முயற்சிக்கவில்லை என்று கூறியும் தற்போது மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
இதையும் படிக்க | பிரதமர் பதவி விலக வேண்டும்: கொழும்பில் போராட்டம்
மக்களின் தீவிர போராட்டத்தைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய மாளிகையிலிருந்து வெளியேறி லட்சத்தீவுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, கொழும்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தில், அதிபா் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி, அதிபா் கோத்தபய இன்று தனது பதவியை ராஜிநாமா செய்கிறார்.
இதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும், அனைத்து கட்சிகள் அடங்கிய ஒரு அரசு அமைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
அதிபர் மாளிகையை அடுத்து, தற்போது பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவசரநிலை பிரகடனத்தின்படி, ராணுவம் மற்றும் போலீசாருக்கு கூடுதல் அதிகாரம், மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
இதையும் படிக்க | இலங்கை அதிபர் பதவியை இன்று பிற்பகலில் ராஜிநாமா செய்கிறார் கோத்தபய