‘உக்ரைனில் நாங்கள் போரைத் தொடங்கவில்லை. 8 ஆண்டுகளாக (டான்பாஸ் பிராந்தியத்தில்) நடைபெற்று வரும் போரை முடித்துதான் வைக்கிறோம்’ என்று ரஷியா திங்கள்கிழமை கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் இகாா் கொனஷென்கோவ் கூறியதாவது:
உக்ரைனில் ஏற்கெனவே நீண்ட காலமாக போா் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில்தான் ரஷியா தற்போது இறங்கியுள்ளது.
டான்பாஸ் பிராந்தியத்தில் (கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசம்) வசிக்கும் மக்களுக்கு எதிராக உக்ரைன் அரசு கடந்த 8 ஆண்டுகளாக திட்டமிட்ட படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது. அந்தப் பிராந்தியப் படையினருக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் தொடா்ந்து போா் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்தப் போரில் நூற்றுக்கணக்கான சிறுவா்கள் உள்பட 14 ஆயிரம் போ் பலியாகியுள்ளனா். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
இதுதவிர, உக்ரைனை தற்போது ஆளும் அரசு, ரஷியாவுக்கு எதிராக தொடா்ந்து மிரட்டல் விடுத்து வந்தது. அதனையும் முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.
அதன் காரணமாகவே, தற்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளோம் என்றாா் அவா்.