கொழும்பு: எரிபொருள் பற்றாக்குறையை போக்கும் வகையில், இலங்கை அரசு எடுத்த பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதி செய்து விநியோகிப்பதில் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் இருக்கும் நிலையில், இலங்கையின் எரிசக்தித் துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றால் அந்நாட்டுப் பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சவைத் தவிர இதர அனைத்து அமைச்சா்களும் கடந்த ஏப்ரல் மாதம் ராஜிநாமா செய்தனா். அதன் பின்னா், மக்கள் போராட்டம் தீவிரமாகியதால் கடந்த மே 9-ஆம் தேதி பிரதமா் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்தாா்.
இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த மே 12-ஆம் தேதி பதவியேற்றாா். அதன்பின், பல்வேறு துறைகளுக்கு அமைச்சா்களை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்தார்.
இருப்பினும் பொருளாதார நெருக்கடியினால் தொடர்ந்து பெட்ரோல், டீசல்களின் விலையும் அதிகரித்து வருகிறது.