இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பல இடங்களில், குண்டுவெடிப்பு உள்ளிட்ட தாக்குதல் சம்பவங்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த நிலையில், பயங்கரவாதிகளின் சதி முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா, பஹவல்பூர், சாஹிவால், பைசலாபாத், சர்கோதா மற்றும் லாகூர் உள்பட 147 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர், டிடிபி மற்றும் ஐஎஸ்ஐ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 14 பயங்கரவாதிகள் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பஞ்சாப் மாவட்டத்தின் பல முக்கிய இடங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.