காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடுமையான குண்டுவீச்சு மற்றும் தரைவழி தாக்குதலின் விளைவாக காயமுற்ற மற்றும் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கான் யூனிஸ் நகரத்தின் மையத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் இருப்பதாகவும் தரைவழி தாக்குதலைத் தெற்கு நோக்கி விரிவுப்படுத்தவுள்ளதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவ அதிகாரிகள், போர் தொடங்கியதுமுதல் அதிதீவிரமான நாளொன்றை இப்போது எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்கள்.
தெற்கு நோக்கிய இஸ்ரேலின் தாக்குதல் மிகப்பெரிய அளவிலான மனித இடப்பெயர்வுக்கு வழிவகுக்கும் என ஐநா எச்சரித்துள்ளது. ஏறத்தாழ 18.7 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடப்பெயர்ந்துள்ள நிலையில் ஏற்கெனவே குறைவாகக் கிடைக்கும் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதி பகிர்மானத்தை இந்தத் தாக்குதல் மேலும் பாதிக்கும் என ஐநா எச்சரித்துள்ளது.
பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்துள்ள பகுதிகள் உள்பட காஸா முழுவதும் குண்டுவீச்சு கடுமையாக்கப்பட்டுள்ளது.
பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 16,200 எனவும் காயமுற்றோர் எண்ணிக்கை 42 ஆயிரத்துக்கு அதிகமாக உள்ளது எனவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர் நிறைவுற்ற பிறகு காஸாவின் பாதுகாப்பு கட்டுப்பாடு இஸ்ரேலிடம்தான் இருக்கும் எனக் குறிப்பிட்டது, மறைமுகமாக காஸாவை மீண்டும் இஸ்ரேல் ஆக்கிரமிக்கும் திட்டத்தின் வெளிப்பாடுதான் எனக் கருதப்படுகிறது.
கான் யூனிஸ் நகரத் தாக்குதலுக்குப் பிறகு தெய்ர் அல்-பலா நகரத்தை நோக்கி இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருகிறது. 150-க்கும் அதிகமான டாக்கிகளும் கவச உடை அணிந்த காவலர்கள் வாகனமும் அந்த வழியில் பயணிப்பதை செயற்கைகோள் படங்கள் மூலமாக அறிய முடிகிறது.
தரைவழி தாக்குதலின் மூன்றாவது கட்டத்தில் இருக்கும் இஸ்ரேல் வான்வழியிலும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக ஐநா மனிதநேய விவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.