மக்கள் தஞ்சம் புகுந்துள்ள காஸா தேவாலயத்தை இஸ்ரேல் ராணுவத்தினர் சுற்றி வளைத்திருப்பது கவலையளிப்பதாக தெரிவித்த பிரிட்டிஷ் எம்பி, தனது நெருங்கிய சொந்தங்கள் அந்த தேவாலயத்திற்குள் ஒளிந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் எம்பி லைலா மோரனின், மகன், மருமகள், அவர்களது 11 வயது இரட்டைக் குழந்தைகள் மற்றும் அவரது பாட்டி ஆகியோர் இஸ்ரேல் ஸ்னைப்பர்களால் (Snipers) சுற்றி வளைக்கப்பட்டுள்ள தேவாலயத்திற்குள் மாட்டியிருப்பது பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
போர் துவங்கிய முதல் வாரத்திலேயே தங்களது வீட்டை இஸ்ரேல் தரை மட்டமாக்கியதால் 60 நாள்களாக காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய தேவாலயத்தில் சிக்கியுள்ள தம் உறவினர்கள், துப்பாக்கியாலோ அல்லது பசியினாலோ இறக்க நேரிடலாம் எனத் தம் அச்சத்தைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அமெரிக்கா முன்னெடுக்கும் பேச்சுவார்த்தை: இஸ்ரேல் உடன்படுமா?
'என் உறவினர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை வரை உயிரோடு இருப்பார்களா என அஞ்சுகிறேன்' என உருக்கமாகக் கூறியுள்ளார். அவ்வப்போது உறவினர்களோடு தொலைபேசியில் பேச வாய்ப்பு கிடைப்பதாகத் தெரிவித்த அவர், தேவாலத்திற்கு எதிரே உள்ள கட்டிடங்களில் உள்ள ஜன்னல்களில் இஸ்ரேல் ஸ்னைப்பர்கள் தேவாலயத்தைக் குறிவைத்து காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோயில்கள், மருத்துவமனைகள், பள்ளிகளின் மீதும்கூட பயங்கர தாக்குதல்களை நடத்துவதற்கு, ஹமாஸ் அமைப்பினர் அங்கு ஒளிந்துள்ளனர் என்பதைக் காரணமாக இஸ்ரேல் கூறிவருகிறது.
இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழித் தாக்குதலுக்கு 18,800-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், 3 இஸ்ரேல் பிணைக் கைதிகளும் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், உள்ளே சிக்கியுள்ள பொது மக்களுக்குத் தேவையான மருந்து மற்றும் உணவுப் பொருள்களை காஸாவிற்குள் அனுமதிக்க இஸ்ரேல் மறுத்துவருகிறது,