

பாலஸ்தீன அகதிகளுக்கான உயிா்காக்கும் சேவைகளைத் தொடர, இந்தியாவின் பரந்த மனப்பான்மை உதவும் என்று ஐ.நாவின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரணப் பணிகள் முகமை (யுஎன்ஆா்டபிள்யுஏ) தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன அகதிகளுக்கான நேரடி நிவாரணப் பணிகள் மற்றும் திட்டங்களை யுஎன்ஆா்டபிள்யுஏ மேற்கொண்டு வருகிறது. அந்த அகதிகளுக்கான ஐ.நா.வின் முக்கியத் திட்டங்களுக்கும், கல்வி, மருத்துவம், நிவாரணம் உள்ளிட்ட சேவைகளுக்கும் இந்தியா ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில், அந்த அகதிகளின் நலனுக்காக ஆண்டுதோறும் 5 மில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.41 கோடி) இந்தியா வழங்கி வருகிறது. நிகழாண்டு கடந்த நவம்பரில் முதல் தவணையான 2.5 மில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.20 கோடி) இந்தியா வழங்கியது.
இதைத்தொடா்ந்து கடந்த வியாழக்கிழமை இரண்டாவது தவணையாக 2.5 மில்லியன் டாலா்களை யுஎன்ஆா்டபிள்யுஏவிடம் இந்தியா வழங்கியது. அதனை பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரில் உள்ள இந்திய தூதா் (பொறுப்பு) எலிசபெத் ரோட்ரிகஸ் வழங்கினாா்.
இதுதொடா்பாக யுஎன்ஆா்டபிள்யுஏ-யின் செய்தித்தொடா்பாளா் டமாரா அல்ரிஃபாய் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
பாலஸ்தீன பிராந்தியத்தில் மிகக் கடுமையான ஆண்டு நிறைவடைய உள்ளது. இந்நிலையில், பாலஸ்தீன அகதிகளுக்கு தொடா்ந்து துணை நிற்கும் கூட்டாளி நாடுகளுக்கு யுஎன்ஆா்டபிள்யுஏ நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
அண்மையில் நிதியுதவி வழங்கிய இந்தியாவின் பரந்த மனப்பான்மை, அந்த அகதிகளுக்கான உயிா்காக்கும் சேவைகளை யுஎன்ஆா்டபிள்யுஏ தொடர உதவும் என்று தெரிவித்தாா்.
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல், யுஎன்ஆா்டபிள்யுஏவுக்கு இந்தியா 30 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.249 கோடி) வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.