வடஅமெரிக்காவின் ஹூரான் ஏரிக்கு மேலே வானில் பறந்த மர்ம பொருளை அமெரிக்க போர் விமானம் நேற்று சுட்டு வீழத்தியது.
அச்சுறுத்தலாக இல்லை என்றாலும் சந்தேகத்திறகிடமான வகையில் பறந்ததால் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எட்டு நாட்களில் அமெரிக்க போர் விமானங்களால் வானத்திலிருந்து சுடப்பட்ட நான்காவது பொருள் இதுவாகும். அமெரிக்காவில் உளவு பலூன் உட்பட 3 மர்ம பொருளும், கனடாவில் ஒரு மர்ம பொருளும் இதுவரை சுட்டு வீழ்த்தப்பட்டது.
அமெரிக்காவில் தெற்கு கரோலினா, அலாஸ்கா, கனடாவின் யூகோனில் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வான் பகுதியில் பிரம்மாண்டமான சீன உளவு பலூன் கடந்த வாரம் கண்டறியப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த உளவு பலூன் அமெரிக்க வான் எல்லைக்குள் புகுந்து பல நாள்களாக சுற்றி வந்ததாகவும், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பகுதிகளின் மேலே பறந்து சென்ாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகன் கூறியது.
பின்னா், அந்த பலூனை அமெரிக்கா கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, அந்த பலூன் வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்டது எனவும், வழிதவறி அமெரிக்க வான் எல்லைக்குள் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தது.