பிரசவத்தின்போது ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணி பெண் இறப்பதாக ஐநா வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசவம் குறித்து ஐக்கிய நாடுகள் அவை மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. கர்ப்பிணி தாய் நிலை எனும் தலைப்பிலான இந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பிரசவத்தின்போது மட்டும் 2 லட்சத்து 87 ஆயிரம் பெண்கள் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது.
அதீத இரத்தப்போக்கு, உயர் இரத்த அழுத்தம், மகப்பேறு தொடர்பாக நோய்கள், கருத்தடை சிக்கல்கள் காரணமாக இந்த இறப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சிக்கல்களை உரிய மருத்துவ வசதியுடன் தவிர்த்திருக்க முடியும் எனத் தெரிவித்துள்ள ஐநா கருவுற்ற பெண்களுக்கு சரியான மற்றும் தரமான மருத்துவ வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், போதிய மற்றும் தரமான மருத்துவப் பணியாளர்கள், மருந்துகள் இருப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருப்பதால் இத்தகைய இறப்புகள் ஏற்படுவதாக ஐநா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.