நேபாளத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் அதிலிருந்த 6 பேரும் உயிரிழந்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சோலுக்கும்பு மாவட்டம், சுர்க்கே விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 10.04 மணிக்குப் புறப்பட்ட மனாங் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர், 10.13 மணிக்கு கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.
9 என்-ஏஎம்வி ரகத்தைச் சேர்ந்த அந்த ஹெலிகாப்டர் அப்போது 12,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.
மலைப்பாங்கான சோலுக்கும்பு மாவட்டத்தின் லிகுபிகோ நகராட்சியைச் சேர்ந்த தொலைதூர லம்ஜுரா பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது பின்னர் தெரியவந்தது.
விபத்து இடத்தைப் பார்வையிட்ட அந்தப் பகுதிவாசிகள், அதிலிருந்த 6 பேரும் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
உயிரிழந்தவர்களில் மெக்ஸிகோவைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகளும், ஹெலிகாப்டரை இயக்கிய சேத் பகதூர் என்ற நேபாள நாட்டவரும் அடங்குவர்.
ஏற்கெனவே ஒரு விபத்திலிருந்து உயிர் தப்பிய பகதூர், 7,000 மணி நேர விமான அனுபவம் பெற்றவர்.
விபத்தில் உயிரிழந்த 5 மெக்ஸிகோ நாட்டவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
விபத்துப் பகுதியில் வானிலை மிக மோசமாக உள்ளதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளத்தின் யேட்டி ஏர்லைன்ஸ் விமானம் 5 இந்தியர்கள் உள்பட 72 பேருடன் கடந்த ஜனவரி மாதம் விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.